Tamilnadu

“வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப...” - தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் முடங்கியுள்ள நிலையில், தாயகம் திரும்ப முடியாமல் அயல்நாடுகளில் தமிழர்கள் பலர் சிக்கியுள்ளனர். சமீபத்தில், அயலகத் தமிழர்களோடு காணொளிக் காட்சி மூலம் உரையாடி, கோரிகைகளைக் கேட்டறிந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.

இந்நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு பின்வருமாறு :

இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 25 முதல் அமலில் இருந்து வருகிறது.

“இதனால், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தை சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகத்திற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும், அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தமிழகத்திற்கு திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களை பற்றிய தகவல்களை பெறுவதற்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: “காவிரி நீர் உரிமையைப் பறிகொடுத்து, பா.ஜ.கவுக்கு சாமரம் வீசும் எடப்பாடி அரசு” - துரைமுருகன் காட்டம்!