Tamilnadu

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 12,000 குடும்பங்களுக்கு உதவி வழங்கிய‌ தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் !

இந்தியாவில் பரவிவரும் கொரோனா தமிழகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித முன்னேற்பாடுகள் இன்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டு மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்த உதவிகளும் தமிழகத்தில் பெரும்பாலான ஏழை மக்களுக்குச் சென்றடையவில்லை. மேலும் பாதுகாப்பு உபகரணமின்றி மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் மக்கள் அனைவருக்கும் தி.மு.கவினர் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

அதன்படி தி.மு.க மற்றும் தி.மு.க அமைப்புகள் சார்பில் தூய்மை பணியாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர்கள், ஆதரவற்றோர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பலரும், நிர்வாகிகளும் நேரடியாக உதவித் தேவைப்படுவோர் இல்லங்களுக்குச் சென்று உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் இருந்தே துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் 'கொரோனா ஊரடங்கினால்' பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார்.

துறைமுகம் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், 100 கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான 20 வகையான மளிகை மற்றும் உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

எழும்பூர் தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு குயப்பேட்டையில் 200 மட்பாண்ட தொழிலாளர்களுக்குத் தேவையான 20 அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட டோபிக் கண்ணா பகுதியில் 10 அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை 200 சலவைத் தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

கொளத்தூர் தொகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், கணினி பயிற்சி மேற்கொள்ளும் 200 பயனாளிகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், கொளத்தூர் தொகுதி, கிழக்குப் பகுதியில் உள்ள திருவள்ளுவர் மண்டபத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 6000 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

அதேபோல், கொளத்தூர் தொகுதி, மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 6000 குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

அடுத்ததாக, கொளத்தூர் தொகுதியில் உள்ள 'அருணோதயா ஆதரவற்றோர் இல்லத்திற்குத்' தேவையான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், உதவி கோரியிருந்த இரு பெண்மணிகளுக்கு காய்கறி விற்பனை செய்வதற்கு தள்ளுவண்டியும் வழங்கியதோடு, ராஜமங்கலம் காவல் நிலைய போலீசாருக்குத் தேவையான முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் (சானிடைசர்) உள்ளிட்ட கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

இதனையடுத்து, வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள போர்ட் ஸ்கூல் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் 200 தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர், அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட முகப்பேர் கிழக்குப் பகுதி வீரமாமுனிவர் சாலையில் கழிவுநீர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 200 பேருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், கொரோனா தடுப்புப் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிதி உதவி ஆகியவற்றை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Also Read: “மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்; அரசியல் செய்ய இது நேரமல்ல” - எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!