Tamilnadu

கொரோனா பாதிப்பு : “தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியது ஏன்?” - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி!

கொரோனா பாதிப்பில் 2ஆம் இடத்தில் இருக்கும் தமிழகத்திற்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டுமென இந்தியா அவேக் பார் டிரான்ஸ்பரன்சி என்ற அமைப்பின் இயக்குனர் ராஜேந்தர் குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கும் நிலையில் ரூ.510 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது போதுமானதாக இருக்காது எனத் தெரிவித்தனர். மேலும் கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அதிக தொகையை ஒதுக்கிய மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏன் குறைவாக ஒதுக்கியது என்பது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை வழக்கில் சேர்த்ததுடன் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

மேலும், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் உறவினர்கள், வெளிநாடு சென்று வந்தவர்களின் உறவினர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும், முன்வரத் தவறினால் அவர்களை கட்டாயப்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பிரச்னைக்கும் பிரதமரையும், முதல்வரையும் பேச வரச்சொல்வது போன்று சிறுவன் பேசுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும், ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டுமெனவும், அவர்களின் நிறுவனங்களின் தகவலை பெற்று உண்மைத் தன்மையை ஆராய வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

Also Read: தீவிரமடையும் கொரோனா பாதிப்பு : ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு திட்டம்? #CoronaLockdown