Tamilnadu

“கொரோனா பீதியால் இறுதிச் சடங்கிற்குக் கூட வராத உறவினர்கள்” : உடலை சொந்த செலவில் அடக்கம் செய்த போலிஸார்!

உலகம் முழுவதும் கொரோனா பெரும் விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸால் இதுவரை 1,071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க அறிவுத்தப்பட்டுள்ளனர். மேலும் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விழுப்புரத்தில் உயிரிழந்தவரின் இறுதிச் சடங்கிற்கு கொரோனா அச்சம் காரணமாக ஒருவர் கூட கலந்துகொள்ளாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த 62 வயதானவர் சோலை. வாட்ச்மேன் வேலை பார்த்து வந்த இவர் தனது இரண்டு மகன்களுடன் தனது சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே சோலையின் மனைவி இறந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் மற்றும் இரணாவது மகன் இருவரையும் சோலையே வளர்த்து வந்துள்ளார்.

சோலை பணிக்குச் சென்ற பல நாட்களில் அக்கம் பக்கத்தினர் அவரது இரண்டு மகன்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் மதுப்பழக்கம் கொண்டிருந்த சோலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து, தனது அப்பா இறந்துவிட்டதாக சோலையின் கடைசி மகன் அக்கம்பக்கம் உள்ளவர்களிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். சோலை கொரோனா பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என நினைத்து உறவினர்கள் உட்பட யாரும் வந்து பார்க்கவில்லை.

பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அனந்தபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சோலையை பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சு வலி காரணமாக அவர் உயிரிழந்தாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து உடலை மீட்டும் செஞ்சிக்குக் கொண்டுவந்த போலிஸார் கொரோனாவால் சோலை உயிரிழக்கவில்லை என்று கூறியும், அவரது சடலத்திற்கு அருகில் யாரும் வரவில்லை. இதனையடுத்து போலிஸாரே தங்களின் சொந்த செலவில் சோலையின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

மேலும், சோலையின் இரு மகன்களையும் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான முயற்சிகளை போலிஸார் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. போலிஸாரின் இந்தச் செயலுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Also Read: “பிரசவத்துக்கு முன்பும் கூட ஆய்வு பணி” : கொரோனா கண்டறியும் கருவி கண்டுபிடித்து இந்தியப் பெண் அசத்தல்!