Tamilnadu

“கொரோனா ஊரடங்கில் கடைபிடிக்கவேண்டியவை - எந்தெந்த கடைகள் எவ்வளவு நேரம் செயல்படலாம்?” : அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் தீவிரமாக செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மக்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பக்கப்பட்டுள்ள உத்தரவுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் அறிவிப்பு வருமாறு: கோயம்பேடு காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

பெட்ரோல் நிலையங்கள்: பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் போன்ற ஊா்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் மட்டும் நாள் முழுவதும் தொடா்ந்து செயல்படும்.

கோயம்பேடு சந்தைக்கு காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு வரும் லாரிகள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

மருந்தகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும்.

இதேபோல், ஸ்விக்கி, ஸோமோட்டோ உள்ளிட்ட உணவுகளை நேரடியாகக் கொண்டு வந்து கொடுக்கும் செயலிகள் காலை 7 - 9.30 மணி வரையும், மதியம் 12 - 2.30 மணி வரையும், மாலை 6 - 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கூடக் கூடாது. சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாத வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு, நிறுவனங்களே அவர்கள் இருப்பிடத்திற்கும், உணவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

மேலும், கடைகளில் 1 மீட்டர் இடைவெளி அவசியம் என்றும், அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் செல்லக்கூடாது மற்றும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் மட்டுமே செல்லவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: “இதற்கு ஏன் ஊரடங்கு?” : டெல்லியில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள் - கோட்டைவிட்ட அரசு! #CoronaLockdown