Tamilnadu

"50 வயதுக்கு மேற்பட்ட போலிஸார் ஓய்வில் இருங்க” - மண்டல இணை ஆணையர் உத்தரவுக்கு குவியும் ஆதரவு!

50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு ஓய்வு அளிக்கும்படி சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் இதுவரை 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் சாலைகளில் அதிக அளவில் பொதுமக்கள் இல்லாததாலும், சென்னையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் ஏதும் நடைபெறாததாலும், காவலர்கள் அதிக பணிச் சிரமமின்றி இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், காவல் நிலையங்களில் காவலர்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர்.

மேலும், 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு ஓய்வு அளிக்கும்படி மண்டல இணை ஆணையர் சுதாகர் வாக்கி டாக்கி மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இரவுப் பணி ஆற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு இரண்டு நாட்கள் ஓய்வு அளித்து பின் மீண்டும் பணி வழங்குமாறும் காவலர்கள் ஓய்வில் இருந்தாலும் தொடர்ந்து இணைப்பில் இருக்கும்படியும் அறிவித்துள்ளார்.

மேலும் காவலர்கள் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் எனவும் தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக பணிக்கு வரும் வகையில் தயாராக இருக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் வயதானவர்களை எளிதில் தாக்கக்கூடும் என்பதனால் 50 வயதிற்கு மேற்பட்ட காவலர்களுக்கு ஓய்வு கொடுக்கும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் சுதாகர் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ள இந்த ஆடியோ வெளியாகி உள்ளதால், மற்ற சரகத்தில் உள்ள காவலர்களுக்கும் இதே போல ஓய்வு வழங்கலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: கொரோனா ஊரடங்கு: 'வெளியே வந்தா... அவுட் ஆயிடுவீங்க' - கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்ட நூதன புகைப்படம்!