Tamilnadu

மக்கள் ஊரடங்கு தினத்தில் ஆதரவற்ற மக்களுக்கு உணவளிக்கச் சென்றவரைத் தாக்கிய போலிஸ் அதிகாரிகள் !

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினம் பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. பெரும்பாலான மாநிலங்களில் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஊரடங்கு சில மாநிலங்களில் குளறுபடியில் முடிந்தது.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கைக் கடைபிடிக்க உத்தரவிட்ட அரசுகள் ஏழை, தினக்கூலி தொழிலாளர்கள், சாலையோரங்களில் தங்கியிருப்பவர்கள் என எதனைப் பற்றியும் கவலைப்படாமல் உத்தரவை மட்டும் நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், சில தன்னார்வலர்கள் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு வழங்கிவந்தனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள பேருந்து நிலையத்தில் சாலையோரத்தில் வசிக்கும் முதியவர்கள் உணவின்றி தவித்து வந்தனர். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த தனியார் உடற்கல்வி ஆசிரியர் உதயகுமாரும், அவரது நண்பர்களும் உணவின்றி தவித்தவர்களுக்கு தங்களது வீட்டிலே உணவு சமைத்து பார்சல் மூலம் விநியோகித்தனர்.

அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் உதயகுமாரையும் அவரது நண்பரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது எதற்காக வந்தோம் என உதயகுமார் எடுத்துக்கூறியுள்ளார்.

ஆனால் அவர் சொன்ன விளக்கங்களைக் காது கொடுத்துக் கேட்காத போலிஸார் உதயகுமாரை தாக்கியுள்ளனர். இதை பார்த்த தாசில்தாரும் உதயகுமாரை ஊரடங்கு இருக்கும் போது ஏன் வெளியில் வந்தாய் என அவர் தரப்புக்கு திட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வீட்டிற்குச் சென்ற உதயகுமாரை செல்போன் மூலம் வீடியோ எடுத்தற்கான வீசாரணை எனக் கூறி போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி அம்மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக உதயகுமார் பேசுகையில், ஆதரவற்றவர்களுக்கு உதவுவதற்காக வீட்டை விட்டு வெளியில் வந்தோம். ஆனால் எங்களை சமூக விரோதிகள் போல் போலிஸார் நடத்துக்கின்றனர். அரசு செய்ய வேண்டிய வேலையை நாங்கள் செய்த நீங்கள் என்ன கவுர்மெண்டா? என கேட்டு அடிக்கிறார்.

இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

Also Read: “ஊரடங்கு மத்தியில் கூட்டம் கூட்டமாக ரயில் பயணித்த வட இந்தியர்கள்”: இந்தியாவில் தனிப்படுத்துதல் சாத்தியமா?