Tamilnadu

“தென் மாவட்டங்களில் தொடரும் பெண் சிசுக்கொலை - 6 நாட்களே ஆன பெண் குழந்தை கொலையா?” : அதிர்ச்சித் தகவல்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மொட்டனூத்து கிராமம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - கவிதா தம்பதி. இவர்களுக்கு 10 வயதிலும், 8 வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கவிதாவுக்கு மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை கடந்த பிப்ரவரி 26ம் தேதி பிறந்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் 2ம் தேதி அந்தப் பெண் குழந்தைக்கு உடல்நிலை மோசமானதாகவும், வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தையின் உடலை வெளீல் யாருக்கும் தெரியாமல் வீட்டின் அருகிலேயே புதைத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக குழந்தைகள் நல அலுவலக தொலைபேசியில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட குழந்தைகள் நல அலுவலர்கள் தேனி மாவட்ட சமூக நல அலுவலர்கள் இதுகுறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டனர். பின்னர் தேனி சமூக நல அலுவலர்கள் கன்னியபிள்ளைபட்டி புறக்காவல் நிலையத்தில் பெண்குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்தார்.

இதையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் சுரேஷ் - கவிதா தம்பதியினரை அழைத்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையைக் கள்ளிப்பால் கொடுத்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

தென் மாவட்டங்களில் தொடரும் பெண் சிசுக்கொலை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "மீண்டும் தலைதூக்கியிருக்கும் பெண் சிசுக் கொலை இதயத்தைப் பதறச் செய்கிறது” - மு.க.ஸ்டாலின் வேதனை!