Tamilnadu

“அரசியல் சுயவிளம்பரத்திற்காக தன்னைத்தானே வெட்டிக்கொண்டு நாடகம்” : இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகவான் நந்து என்ற நந்த கோபால். இவர் திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த் 17ம் தேதி இரவு தனது செல்போன் கடையில் பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் போன்ற ஆயுங்களால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் போலிஸாரிடம் பகவான் நந்து புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பகவான் நந்து கார் ஓட்டுநர் ருத்ரமூர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூர்த்தி முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த போலிஸார் மூர்த்தியிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் போது அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்த ருத்ரமூர்த்தி, இந்து மக்கள் கட்சியின் நிர்வாகியான பரமசிவம் என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க கூட்டாக சேர்ந்து இந்த முடிவைச் செய்ததாக ஒப்புக்கொண்டார்.

மேலும், திட்டத்தின்படி பரமசிவம் நந்துவைக் கத்தியால் முதுகில் கிழித்ததாகவும், அதன் பின் நந்து தனது இரண்டு கைகளில் காயத்தினை ஏற்படுத்திக்கொண்டு அத்தகைய காயத்தினை இதர மதத்தினர் ஏற்படுத்தியதாக நாடகம் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பகவான் நந்து, வாகன ஓட்டுநர் ருத்ரமூர்த்தி மற்றும் உடந்தையாக இருந்தவர்களை கைது செய்த போலிஸார் பொய் புகார் செய்தல், மதக்கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரசியல் ஆதாயம் பெற நினைத்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த நினைத்த இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளின் செயலால் திருப்பூர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற சுய விளம்பரத்திற்காக மற்றும் அரசியல் லாபத்திற்காக பொதுமக்கள் மற்றும் இதர மதத்தினரிடையே கலகம் ஏற்படுத்தும் நோக்குடன் இந்து மக்கள் தொடர்சியாக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதை தமிழக அரசு தடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக திருச்சியில், தனது வாகனத்தை எரித்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு கலவரத்தைத் தூண்ட நினைத்த இந்து முன்னணி பிரமுகரை போலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “மதக் கலவரத்தை தூண்ட, சொந்த வாகனத்திற்கே தீ வைத்த இந்து முன்னணி நிர்வாகி” - விசாரணையில் உண்மை அம்பலம்!