Tamilnadu

’கொரோனா குறித்து காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு’ : குழப்பத்தில் எடப்பாடி அரசு - உதயநிதி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை மறைத்து அதன் மீது பல்வேறு அவதூறுகளையும், பொய், புரட்டுகளையும் சுமத்தி வரும் அ.தி.மு.க, பா.ஜ.க போன்றோர்களின் பிரசாரங்களை தவிடு பொடியாக்கும் ‘பொய் பெட்டி’ எனும் முயற்சியை முன்னெடுத்துள்ளது உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க இளைஞரணி.

இந்த ‘பொய் பெட்டி’ நிகழ்ச்சியின் அடுத்தடுத்து நிகழ்வுகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி தஞ்சாவூரில் நடைபெற்ற பொய் பெட்டி நிகழ்ச்சியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தயாளு அம்மையார் பெயரில் ‘சுயமரியாதை பெண்கள் விருது’ என்ற பெயரில் பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு உதயநிதி ஸ்டாலின் விருது வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் தி.மு.க உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு திண்டுக்கல் லியோனி பதில் கூறினார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அ.தி.மு.க-வினர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை ‘பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்’ என அறிவித்துள்ளனர்.

அவர் இறந்தது எப்படி என இன்றுவரை கண்டுபிடிக்காதவர்கள் இப்படி அறிவித்திருப்பது பெரும் வேடிக்கையாக உள்ளது. இங்குள்ள ஆட்சியாளர்கள் தினம் தினம் ஒரு கதையை அடித்து விடுவதால் வாரம் வாரம் நமது நிகழ்ச்சியை நடத்தும் அளவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்வர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் அந்த வழக்குகள் ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சி முடிவு செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ஒரு அரசு மருத்துவமனை எவ்வாறு இருக்கக் கூடாது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது.

இதுகுறித்து, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் சட்டமன்றத்தில் குரல் எழுப்புவார். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அறிவிப்பதில் காலையில் ஒன்றும், மாலையில் ஒன்றும் மாற்றி மாற்றி அறிவிப்பு வெளியிடுகிறது. மொத்தத்தில் இந்த அரசு குழப்பத்தில் இருக்கிறது” என தெரிவித்தார்.

Also Read: "மக்கள் தயாராகிவிட்டார்கள்; அடுத்த ஆண்டு தமிழக முதல்வராக இருப்பார் நம் தலைவர்” - உதயநிதி ஸ்டாலின் பேச்சு!