Tamilnadu

“அண்ணா பல்கலை. விவகாரம் - தமிழக அரசின் நாக்கில் தேன் தடவி வலையை விரிக்கிறது மோடி அரசு” : கி.வீரமணி சாடல்!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ‘சிறப்பு அந்தஸ்து’ என்று தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி வலையை விரிக்கிறது மத்திய அரசு என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட இயக்கச் சாதனைகளின் பெருமைமிகு சான்று அண்ணா பல்கலைக்கழகம். அண்ணா பல்கலைக்கழகம் - தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா பெயரில் நிறுவப்பட்ட திராவிட இயக்கச் சாதனைகளின் பெருமைமிகு சான்று.

அதனை கபளீகரம் செய்து மத்திய அரசு தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர, தந்திரமாக அதனைப் பிரித்து, மிகப்பெரிய உயர்கல்வி ஆராய்ச்சித் தனி நிறுவனமாக, அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்வதாக தமிழ்நாடு அரசின் நாக்கில் தேன் தடவி, தனது வலையை விரித்தது.

அப்போது நாமும், தி.மு.கவும் மற்றும் பல கல்வியாளர்களும், பல அரசியல் கட்சிகளும் எதிர்த்தோம். தமிழ்நாடு அரசுக்குத் தக்க முன்னெச்சரிக்கை விடுத்தோம். தமிழக அமைச்சர்கள் 5 பேர் கொண்ட குழு ஒன்று போடப்பட்டு, ஆய்வுக்கு விடப்பட்டபோதே, நாம் தமிழ்நாடு அரசுக்குத் தக்க முன்னெச்சரிக்கை விடுத்தோம்.

“இத்திட்டத்தை தமிழ்நாட்டு அ.தி.மு.க அரசு ஏற்கக்கூடாது; இதனால் காலங்காலமாக நமக்கு - வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69 சதவிகித இட ஒதுக்கீடு பறிக்கக்கூடிய அபாயமும், “ஒட்டகம் கூடாரத்திற்குள் தலையை விட்டு நுழைந்து, முழு ஒட்டகமும் உள்ளே வந்து, உள்ளே இருப்பவர்களை வெளியே விரட்டிடும் கதைபோல, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைமையும் ஆகிவிடும்!” என்று அதில் குறிப்பிட்டிருந்தோம்.

தற்போதுள்ள நிலவரப்படியே மத்திய அரசு தாராளமாக நிதி உதவியை மாநில அரசுக்கு - அண்ணா பல்கலைக்கழக வளர்ச்சிக்குத் தரலாம்; A1 Research University என்று ஆக்கலாம். இந்தத் திட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நேற்று கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் இந்த கபளீகரத் திட்டத்திற்கு இடம் தராத வகையில், உயர்கல்வித் துறை அமைச்சரின் கூற்று அமைந்துள்ளது. இதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இறுதிவரை இருக்கவேண்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்தால், இட ஒதுக்கீடு பறிபோவது, அண்ணா பெயரில் மாற்றம் மட்டுமல்ல; நியமனங்களும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நடைபெறும்.

ஆளுநரின் நியமனம் - தவறான முன்மாதிரி!

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடல் குழு கன்வீனராக டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் (JNU) துணைவேந்தர் என்ற பிரச்னைக்குரிய நபரை ஆளுநர் நியமித்திருப்பது தவறான முன்மாதிரியாகும்.

வெளிமாநிலத்தவர், ஏன் தமிழ் தெரியாத ‘சூரப்பர்கள்’ அங்கு வந்து அதையும் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது. எனவே, உரிமைக்குப் போராடத் தயார் நிலையில் இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்லைப்புற வழியாகக் கைப்பற்ற முயலும் பா.ஜ.க” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!