Tamilnadu

“CAA போராட்டக்காரர்களை விரைந்து அப்புறப்படுத்துக” - ஐகோர்ட் உத்தரவால் கொந்தளித்த மக்கள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து அப்புறப்படுத்த தமிழக போலிஸ் டி.ஜி.பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் இதுதொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இப்போராட்டம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

திருப்பூரில் நடக்கும் CAA எதிர்ப்புப் போராட்டம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு மீதான விசாரணையில் இன்று முதல்நிலை வாதத்தின் போது, போராட்டத்தில் சிறுவர் சிறுமியர், பள்ளி மாணவர்கள் போன்றோரும் ஈடுபடுத்தப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்ந்த டிவிஷன் பெஞ்ச் அரசுத் தரப்பின் விளக்கத்தையும் கேட்டறிந்தது. அரசுத் தரப்பின் வழக்கறிஞர், CAA குறித்த சுமார் 20 வழக்குகள் நிலுவையில் உள்ள விவரத்தைத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், அப்படியானால் ஏன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்கள்.

இது குறித்த உத்தரவில் “அனுமதி பெறாத எந்தப் போராட்டமாக இருந்தாலும், உடனே அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். போராட்டக்காரர்களை முதலில் அப்புறப்படுத்துங்கள்” என உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. திருப்பூரில் நடைபெற்ற தொடர்பான வழக்கில் இடப்பட்டுள்ள இந்த உத்தரவு தமிழகம் முழுக்க பொருந்துமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், இந்த உத்தரவு CAA எதிர்ப்புப் போராட்டங்கள், ஆதரவுப் பேரணிகள் என்ற இரண்டு தரப்புப் போராட்டங்களுக்கும் பொருந்துமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே, தமிழக அரசும், காவல்துறையும் CAA எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அனுமதி மறுத்து, ஆதரவு பேரணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி வரும் நிலையில், இந்தத் தீர்ப்பு போராட்டக்காரர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “CAA-வுக்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் போராடவேண்டிய தருணமிது” - வண்ணாரப்பேட்டையில் டி.எம்.கிருஷ்ணா பேச்சு!