Tamilnadu

‘விடுமுறை எடுக்காத மாணவர்களை விமானத்தில்‌ அழைத்துச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்‌’ : குவியும் பாராட்டு!

விருதுநகர்‌ மாவட்டம்‌, சிவகாசி ஒன்றியம்‌ மங்கலம்‌ கிராமத்தில்‌ அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில்‌ 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 5ம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர்‌ அடிக்கடி விடுமுறை எடுத்துள்ளனர்‌. இவர்களுக்கு பள்ளிக்கு வரும்‌ ஆர்வத்தை அதிகரிக்‌கும்‌ நோக்கில்‌, தலைமை ஆசிரியர்‌ ஜெயச்சந்திரன்‌ ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்.

மாணவர்கள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால்‌ தனது சொந்த செலவில்‌ சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக 4 மாதங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்‌.

அதன்படி சில மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்துள்ளனர். இதையடுத்து, தலைமை ஆசிரியர்‌ ஜெயச்சந்திரன்‌ 5ம்‌ வகுப்பு படிக்கும்‌ 20 மாணவ, மாணவிகள்‌ மற்றும் 4 ஆசிரியர்களை கடந்த வாரம்‌ சென்னைக்கு ரயிலில்‌ சுற்றுலா அழைத்து வந்துள்ளார்.

சென்னைக்கு அழைத்து வந்த மாணவர்களை பல்வேறு இடங்களுக்கு சுற்றிகாட்டியுள்ளார். பின்னர் சிவகாசிக்கு திரும்பும் போது சென்னையில் இருந்து மதுரை வரை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாணவர்களிடையே கல்வி கற்கும் எண்ணத்தை ஊக்குவிக்க தொடர்ந்து அவர் இதுபோல பல்வேறு முயற்சிகளை எடுத்துவருவதாகவும், மங்கலம்‌ கிராம மக்கள் தெரிவித்துவருகின்றனர். மாணவர்களை ஊக்குவிக்கும் விதமான தலைமை ஆசிரியரின் இத்தகைய செயல் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Also Read: “மக்கள் நலனே பிரதானம்” : குடிநீர் பாட்டில் விலையைக் குறைத்த கேரள அரசு - அடுத்த அதிரடியில் பினராயி விஜயன்!