Tamilnadu

ஆயுதப் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பணிச்சுமை காரணமா? அதிர்ச்சி தகவல்!

மதுரை மாவட்டம் மேலுரைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆயுதப்படை காவலராக பணியில் சேர்ந்தார். பல இடங்களில் பணிபுரிந்து வந்த யோகேஸ்வரன் சமீபத்தில் சிவகங்கை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு, திருப்பத்தூர் இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை பணிக்கு தயாராகி வருவதாக 6 மணிக்குச் சென்ற யோகேஸ்வரன் 9 மணியாகியும் வராததால் சந்தேகம் அடைந்த சக காவலர்கள் யோகேஸ்வரனை தேடியுள்ளனர்.

அப்போது உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கழிப்பறை கதவை உடைத்து பார்த்தப்போது யோகேஸ்வரன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக காவலர்கள் திருப்பத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்திவந்தனர். நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் தான் பாதுகாப்பு பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் யோகேஸ்வரன் பணி சுமைக் காரணமா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். யோகேஸ்வரன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "சப் இன்ஸ்பெக்டர் டு கூலி வேலை" - எடப்பாடி ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிக்கு நேர்ந்த கதி!