Tamilnadu

“CAA போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிடுவோரை கைது செய்யாதது ஏன்?” - எடப்பாடிக்கு இயக்குனர் அமீர் கேள்வி!

டெல்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து திரைப்பட இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பின்போது பேசிய அமீர், “1947 முதல் 2014 வரை தான் நம் நாடு சுதந்திர இந்தியாவாக இருந்தது. தற்போது சர்வாதிகார இந்தியாவாக மாறிவிட்டது. மத ரீதியாக செயல்படும் அரசாக தமிழக அரசு இருப்பது வேதனை அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ட்ரம்ப் இந்தியா வந்தபோது மிகப்பெரிய வன்முறை நடந்துள்ளது. மசூதி மீது திட்டமிட்ட தாக்குதல் நடந்தது. வன்முறை செய்ய நினைப்பவர்கள் வன்முறை நடைபெறும் எனச் சொல்லி வன்முறையில் ஈடுபடுகின்றனர். அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.

ஆனால் ஆளும் அரசு, சி.ஏ.ஏ.,விற்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றனர் என்கிறது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 600-க்கும் மேற்பட்டவர்கள் தீர்மான்ம் நிறைவேற்றியுள்ளனர். அங்கே எதிர்கட்சிகளா தூண்டிவிட்டன? இந்தியாவில் கேரளாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காரணம் எனச் சொல்வீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “வண்ணாரப்பேட்டையிலும் கலவரம் நடக்கும் என சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல் தமிழகத்தில் நடைபெறக் கூடாது.

முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் ஏன் வண்ணாரப்பேட்டை மக்களைச் சந்தித்து பேச மறுக்கின்றனர்? என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆரை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் உறுதி அளித்தால் மட்டுமே போராடும் மக்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியாவின் நிலை வேதனையளிக்கிறது” : டெல்லி வன்முறை குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் ஆதங்கம்!