Tamilnadu

“அடுத்து சென்னைதானே?” - தமிழர்களைக் கொதிக்கச் செய்த CAA ஆதரவாளர்களின் பதாகை வாசகம்!

பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாகக் கூறி வன்முறையில் இறங்கியது இந்துத்வா கும்பல்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறை நாற்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கி இருக்கிறது. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் கடைகளுக்கும், வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், அதற்கு எதிரான போராட்டங்களை தடுத்து நிறுத்தக் கோரியும் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பா.ஜ.க சார்பில் பேரணிகள் நடைபெற்றன.

சென்னையில் நடைபெற்ற பேரணியின்போது சி.ஏ.ஏ ஆதரவாளர்கள் வன்முறையைத் தூண்டும் விதமான பதாகைகளை கையில் பிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்தப் பதாகையில் “டெல்லி எரிந்தது; அடுத்து சென்னையின் ஷாஹீன்பாக்தானே?” எனக் கேள்வி எழுப்பும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. வன்முறையைத் தூண்டும் இவ்விதமான பதாகை இந்தப் பேரணியில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது போலிஸார் தடியடி நடத்தி கலவரத்தை உண்டாக்க முயற்சித்தனர். அந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வண்ணாரப்பேட்டை ‘சென்னையின் ஷாஹீன்பாக்’ என வர்ணிக்கப்படுகிறது.

அங்குதான் அடுத்து கலவரம் உருவாக வேண்டும் என சி.ஏ.ஏ ஆதரவு போராட்டத்தில் பதாகை பிடித்த வட இந்தியர்கள் உள்ளிட்ட பா.ஜ.க ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி, அமைதி, நேர்மறையான சமூகச் சூழல், தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றால் வட இந்தியர்கள் அதிகமாக இங்கு வந்து வேலைவாய்ப்புகளைப் பெற்று நீண்டகாலமாக வசித்து வருகின்றனர்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியிலும், சென்னை உட்பட தமிழக நகரங்களில் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

ரயில்வே பணித் தேர்வுகளிலும், அரசுப் பணிக்கான தேர்வுகளிலும் தமிழே தெரியாத வட மாநிலத்தவர்கள் வெற்றி பெற்று பணிகளைப் பெறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தையும் வன்முறைக் காடாக்க தமிழக வாழ் வட இந்தியர்கள் முயல்வது பேரணியில் ஏந்தியிருக்கும் பதாகை மூலம் தெளிவாகிறது.

வெளிப்படையாக வன்முறையைத் தூண்டும் இதுபோன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட்டு, அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Also Read: "நாங்கள் கல்லெடுத்தும் எறிவோம்” - வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய அ.தி.மு.க அமைச்சர்!