Tamilnadu

எடப்பாடி அரசின் மெத்தனத்தால் பறிபோன சூரிய மின்சக்தி திட்டம் - ரத்து செய்த மத்திய எரிசக்தி துறை!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த 500 மெகாவாட் சூரியமின்சக்தி உற்பத்தி திட்டம், எடப்பாடி அரசின் மெத்தனத்தால், மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

500 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி திட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய எரிசக்தி துறை ரத்து செய்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு சட்டசபையில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 1,500 ஏக்கரில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்தத் திட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்து வந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.

அதேபோல, கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க அரசு கடலாடியில் சூரிய மின்திட்டத்தை அறிவித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள தமிழக மின்சார வாரியம், “சூரியமின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 1,500 ஏக்கர்நிலம் கண்டறியப்பட்டுள்ளதால், திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் மீண்டும் விண்ணப்பம் செய்வோம்” எனத் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், மெத்தனப் போக்காலும், பலருக்கும் வேலைவாய்ப்பை அளிக்கும், ஓரளவுக்கு மின்சார தன்னிறைவைத் தரும் இந்தத் திட்டம் பறிபோனதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Also Read: எதற்கு இந்த ஏமாற்று வேலை? - எடப்பாடி அரசின் வேளாண் மண்டல அறிவிப்பும்... உண்மையும்!