Tamilnadu

"தொண்டு என்ற சொல்லுக்கு அடையாளம் சிவானந்தா குருகுல நிறுவனர் ராஜாராம்” - மு.க.ஸ்டாலின் இரங்கல்!

சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் செயல்பட்டு வரும் சிவானந்தா குருகுலத்தின் நிறுவனர் ராஜாராம். பெற்றோர் இல்லாத பிள்ளைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என ஆதரவற்றோர்களின் சரணாலயமாக சிவானந்தா குருகுலம் திகழ்கிறது. சமூகப் பணிகளில் பெருவிருப்பம் கொண்ட சிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் நேற்று உடல்நலமின்றி காலமானார்.

சிவானந்தா குருகுல நிறுவனர் பத்மஸ்ரீ ராஜாராம் அவர்களின் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தொண்டு என்று சொல்லுக்கு அடையாளமாகவும், அதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தும் கொண்ட சிவானந்தா குருகுலத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜாராம் அவர்களின் இறப்பு பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

சமூகத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள்-முதியோர் எனப் பலருக்கும் ஆதரவுக் கரமாக இருந்து மறுவாழ்வு அளித்தவர். என்னுடைய பிறந்தநாளில் அவரது குருகுலத்திற்குச் சென்று அங்கு தங்கியிருப்போருடன் அளவளாவி, நிதியுதவி வழங்கியிருக்கிறேன். அப்போது ராஜாராம் அவர்களின் தூய தொண்டுள்ளத்தையும் சலிப்பில்லாத அர்ப்பணிப்பையும் கவனித்துள்ளேன்.

அவரது மறைவால் வேதனையில் உள்ள அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆற்றிய தொண்டும் அவர் உருவாக்கிய சேவை அமைப்புகளும் என்றென்றும் நிலைத்திருக்கும். அதில் ராஜாராம் வாழ்ந்து கொண்டிருப்பார்." எனத் தெரிவித்துள்ளார்.