Tamilnadu

“ரூ.4,56,660 கோடியாக அதிகரிக்கும் கடன்” : தமிழகத்தை கடனில் தத்தளிக்கச் செய்த 9 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அப்போது பட்ஜெட் உரையின்போது 2020 - 2021ம் நிதியாண்டில் தமிழகத்தின் கடன் ரூ.4,56,660 கோடியாக இருக்கும் எனத் தெரிவித்தார். முன்னதாக கடந்த 2019 - 2020ம் நிதியாண்டில் தமிழகத்தில் கடன் தொகை 3,97,494 கோடி ரூபாயாக இருந்தது.

தற்போது 2020 - 2021ம் நிதியாண்டில் ரூ.4,56,660 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரே நிதியாண்டில் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்தின் கடன் அதிகரித்துள்ளது. தி.மு.க ஆட்சியின்போது 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் சுமை அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்துக் கொண்டே வந்தது.

அ.தி.மு.க ஆட்சியின் போது இப்படியே படிப்படியாக உயர்ந்த கடன் 2017 - 2018ம் நிதியாண்டில் 3,14,366 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்தது. தொடர்ந்து, 2018 - 2019-ல் 3.55,844 கோடி ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில், 2019 - 2020ம் நிதியாண்டில் 3,97,495 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 - 2021ல் ரூ.4,56,660 கோடியாக உயரும் என்பதை அரசே தனது பட்ஜெட் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது ஒரே ஆண்டில் சுமார் 62 ஆயிரம் கோடி கடன் பெற்று தமிழகத்தை கடன்கார மாநிலமாக இந்த அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் தமிழக மக்களின் ஒவ்வொருவரின் தலையிலும் 45 ஆயிரம் என்றிருந்த கடன் தொகை 57,500 ரூபாயாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: #LIVEUpdates | தமிழக பட்ஜெட் 2020-2021 : ரூ.4 லட்சம் கோடி கடன்சுமையில் இருந்து மீளுமா தமிழகம் ?