Tamilnadu

சொத்து வரியை உயர்த்தாமல் அரசு தூங்குகிறதா? - சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை விளாசிய உயர்நீதிமன்றம்!

சென்னை மாநகராட்சியில், சொத்து வரி வசூலிக்க விதிகளை வகுக்கும்படி மாநகராட்சிக்கும், அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, கடந்த 2018 ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை அமல்படுத்தாமல் நிறுத்திவைக்க முடிவெடுத்தது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர், மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, அரசின் அவசர பணியாக மாநகராட்சி ஆணையர் டெல்லி செல்வதால் அவர் இன்று நேரில் ஆஜராக முடியவில்லை எனவும், அவர் ஆஜராக அவகாசம் வழங்கவேண்டும் எனவும் கோரினார்.

இதையடுத்து, நீதிபதிகள், சொத்துவரியை உயர்த்தாமல் கடந்த 20 ஆண்டுகளாக அரசு தூங்கிக் கொண்டிருப்பதாக கண்டனம் தெரிவித்தனர். 20 ஆண்டுகளில் 4 முறை வரியை உயர்த்தி இருக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், மேயர் பதவியை பிடிப்பது என்பதில் மட்டுமே அரசியல் கட்சியினர் ஆர்வம் காட்டுவதாக கருத்து தெரிவித்தனர்.

மேலும், மாநகராட்சி பகுதியில் இல்லாதவர்கள்தான் அதிகமாக சொத்து வரி செலுத்துவதாகவும், சொத்து வரி உயர்த்தாததால் தான், வெளியூரைச் சேர்ந்தவர்கள் சென்னையில் முதலீடுகள் செய்ய ஆர்வம் காட்டுவதற்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.

சொத்துவரி உயர்த்தாதது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் ஆகியோர் வரும் 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: 4 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் சொத்து வரி... பிரபல கல்லூரி மற்றும் ஓட்டலுக்கு மாநகராட்சி நோட்டீஸ்!