Tamilnadu
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை - கைவிரித்த தமிழக அரசு!
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி, நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தற்போது முன்கூட்டியே விடுதலை கோரி மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும், 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய பிறகு நியாயமற்ற முறையிலும், சட்டவிரோதமாகவும் சிறையில் அடைத்துள்ளதால் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான் எனவும் வாதிட்டார்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமென்றும், ஆளுநர் கையெழுத்து கூட போட தேவையில்லை என்றும் கூறினார். தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஒவ்வொரு நாளும் சட்டவிரோதமாகவே நளினி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மாநில அரசு நளினி உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக 2018 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியது என்றும், அமைச்சரவை பரிந்துரைத்தாலும் அதுதொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார். மேலும், ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என்றும், எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா என்பது குறித்து தெளிவுபடுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!