Tamilnadu

TNPSC முறைகேடு வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த சித்தாண்டியை கைது செய்தது CBCID-உயரதிகாரிகள் சிக்குவார்களா?

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் தேடப்பட்டு வந்த காவலர் சித்தாண்டி சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குரூப்-4 தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், 42 பேர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசாரணையைத் துவங்கிய சி.பி.சி.ஐ.டி போலிஸார், முறைகேடு செய்து தேர்ச்சி பெற்ற 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சி.பி.சி.ஐ.டி போலிஸார் சித்தாண்டியின் சகோதரர் வேல்முருகனை கடந்த 1ஆம் தேதி கைது செய்தனர். நேற்றுவரை 4 பெண்கள் உள்பட 9 அரசு அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் காவலர் சித்தாண்டி, தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து முறைகேடு செய்து தனது குடும்பத்தில் உள்ளவர்களை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு, டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சித்தாண்டி

கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த காவலர் சித்தாண்டியை இன்று சி.பி.சி.ஐ.டி போலிஸார் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட காவலர் சித்தாண்டியை சி.பி.சி.ஐ.டி போலிஸார் சென்னையில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து வருகின்றனர்.

குரூப்-2ஏ முறைகேடு வழக்கில் 4 பெண் அதிகாரிகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் உட்பட 9 அரசு அதிகாரிகளை சி.பிசி.ஐ.டி போலிஸார் கைது செய்துள்ள நிலையில் இன்று 10வது குற்றவாளியாக காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read: "முறையாக விசாரணை நடத்தாவிட்டால் TNPSC முறைகேடுகளை படுகுழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்” : ஆர்.எஸ்.பாரதி