Tamilnadu

4 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் சொத்து வரி... பிரபல கல்லூரி மற்றும் ஓட்டலுக்கு மாநகராட்சி நோட்டீஸ்!

சென்னை லயோலா கல்லூரியின் பிரதான நுழைவுவாயிலில் ஒட்டப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், கடந்த 4 ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு செலுத்தவேண்டிய சுமார் 96 லட்சத்து 46 ஆயிரத்து 688 ரூபாய் சொத்து வரியை செலுத்தவேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் நிலுவை வரியை வசூலிக்க உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியான ரெசிடென்சியிலும் பெருநகர மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில், சுமார் 75 லட்சம் ரூபாய்க்கு ரெசிடென்சி நிர்வாகம் சொத்து வரி செலுத்தத் தவறியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாணவரிடமும் லட்சக்கணக்கில் கட்டணமாக பெற்றுக்கொண்டு இயங்கும் லயோலா கல்லூரிக்கும், நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் ரெசிடென்சி நட்சத்திர விடுதிக்கும் நிலுவை சொத்து வரியை செலுத்தும்படி அறிவுறுத்தும் விதமாக மட்டுமே அதிகாரிகள் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

இதுவே நடுத்தர மக்கள் எவரேனும் அரசுக்குச் செலுத்தவேண்டிய சொத்து வரியை கட்ட தவறிவிட்டால் போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கான குடிநீர், மின்சார சேவைகளைத் துண்டித்து அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர்.

சாமானிய மக்கள் வரி செலுத்தத் தவறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் அரசு அதிகாரிகள், லயோலா, ரெசிடென்சி போன்ற பெருநிறுவனங்களுக்கு மட்டும் கால அவகாசம் கொடுத்து பாரபட்சம் காட்டுவது ஏன் என்றும், வரி செலுத்தாமல் புறக்கணித்தால் எவராக இருந்தாலும் ஒரே மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இனியாவது, இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எவ்வாறு கையாளும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.