Tamilnadu

#CAA-வுக்கு எதிராக சுவரோவியம் வரைந்த 2 பெண்கள் கைது - அடக்குமுறையைக் கையாளும் எடப்பாடி அரசு!

மோடி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன. இந்தப் போராட்டத்திற்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் ஆதரவளித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியற்காக இதுவரை 10,000-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகம் ஒருபடி மேலே சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகித்தாலும், கோலம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தாலும் வழக்குத் தொடரப்பட்டு வரும்நிலையில், தற்போது சுவர் ஓவியம் வரைந்தவர்களையும் போலிஸார் கைது செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெற வலியுறுத்தியும், கல்வி, வேலைவாய்ப்பு வேண்டும் எனக் கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் சார்பில் திருச்சியில் மாநாடு நடத்தவுள்ளனர்.

இந்த மாநாட்டை விளக்கி, காஞ்சிபுரம் மாவட்டம் பழைய ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் செய்த மக்கள் அதிகாரத்தை சேர்ந்த இரு பெண்களை போலிஸார் இன்று கைது செய்துள்ளனர். போலிஸாரின் இத்தகைய நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Also Read: சென்னையில் போராட்டம் நடத்த தடை : #CAA போராட்டங்களை ஒடுக்க எடப்பாடி அரசின் அராஜக முயற்சி!