Tamilnadu
“எப்படியாவது மாத்திக்கொடுங்க”: 12,000 ரூபாய்க்கு செல்லாத நோட்டை வைத்துக்கொண்டு தவிக்கும் வேலூர் மூதாட்டி!
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளில் ஒன்றான பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இன்றளவும், நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆன போதும் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்பு சுவடுகள் அழியாமலே உள்ளது. அதற்கு ஆதாரமாக நேற்று முன் தினம் வேலூரில் நடந்த சம்பவம் காண்போரை நிலைக்குலைய வைத்துள்ளது.
வேலூர் சலவன் பேட்டை சூளைமேட்டை சேர்ந்தவர் 65 வயதான மூதாட்டி புவனேஸ்வரி. கட்டட தொழிலாளியான இவருக்கு கணவர், பிள்ளைகள் என எந்த உறவும் இல்லை. தனியாகவே நாட்களை கடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைத்தீர்ப்பு கூட்டத்திற்கு கையில் பணத்துடன் வந்த புவனேஸ்வரியின் கோரிக்கைகள் காண்போரை மனம் உருகச் செய்துள்ளது.
கட்டட தொழிலாளியான தான் 1300 ரூபாய் மதிப்புள்ள வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், கட்டட தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் ரூ.1000 மாத ஓய்வூதியம் கிடைக்கிறது என்றும், இதனை வைத்து அன்றாடச் செலவுக்கு பயன்படுத்துவது கடினமாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும், தனக்கு காசநோய் பாதிப்பு உள்ளதால் இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், தனக்கு கிடைக்கும் ஊதியத்தில் இருந்து சிறுக சிறுக சேமித்ததில் 12 ஆயிரம் வரை தேரியுள்ளது. இதனை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்தாலும் செல்லாத நோட்டு எனச் சொல்லி வாங்க மறுத்துவிட்டார்.
வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என தெரியாததால் பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது பற்றி தெரியவில்லை. இந்த பணத்தை எப்படியாவது மாற்றிக்கொடுங்கள் என கண்ணீர் மல்க கெஞ்சியுள்ளார் மூதாட்டி புவனேஸ்வரி.
இவரது கண்ணீருக்கு பதிலளிக்கும் விதமாக மாவட்ட வருவாய் அலுவலர், வங்கி அதிகாரியிடம் செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிவகை உண்டா என கேட்டதற்கு, ஆர்.பி.ஐயின் நடைமுறைப்படி இப்போதைக்கு மாற்ற முடியாது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து, பணத்தை மாற்ற எந்த வழியும் இல்லை எனக் கூறி மூதாட்டி புவனேஸ்வரியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
கருப்பு பணத்தை ஒழிக்கிறேன் என மக்களிடையே பொய் பிரசாரம் செய்து அவர்களிடம் இருந்து வாக்கை பெற்று அவர்களையே அஞ்சுக்கும், பத்துக்கும் அல்லாட வைப்பதையே இந்த மோடி அரசு செய்து வருகிறது என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!