Tamilnadu

எஸ்.ஐ வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தொடர்பு - முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் வாகனப் பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடந்த 8-ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலையாளிகள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் என பா.ஜ.க தலைவர்கள் எச்.ராஜாவும், பொன்.ராதாகிருஷ்ணனும் எல்லோருக்கும் முன்பாக புலனாய்வு செய்து அறிவித்தனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை திசைதிருப்ப இதைப் பயன்படுத்தியது பா.ஜ.க.

இந்நிலையில், உதவி ஆய்வாளர் வில்சன் படுகொலையில் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.சாண்ட் மாஃபியாக்களுக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ அப்பாவு.

Appavu Ex MLa

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “மத்திய இணை அமைச்சராக இருந்த பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்.சாண்ட் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். ஆகவே தான் அவர் மத்திய அமைச்சரவையில் இருந்தபோதிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படாமல் கவனமாக பார்த்துக்கொண்டார்.

இப்போது கூட கேரளாவில் உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்தே கொலையாளிகளை தேடுகின்றனர். தனது சுயநலத்துக்காகவும், மணல் கடத்தல் விவகாரத்தில் மாட்டிக்கொள்ளாமல் மறைக்கவுமே சி.சி.டி.வி கேமராக்களை இயங்காமல் தடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

எனவே கேரளாவுக்கு சட்டவிரோதமாக தினமும் 500 லாரிகளில் போலி எம்.சாண்ட் மணல் கடத்தும் பொன்.ராதாகிருஷ்ணனின் ஆட்களே சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சம்பந்தப்பட்டிருக்க அதிகம் வாய்ப்புள்ளது.

மணல் கடத்தல் தொழில் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்த எஸ்.ஐ வில்சனை குண்டர்களை வைத்து கொலை செய்துவிட்டு, பழியை வேறு யார் மீதாவது போட்டுவிடலாம் எனத் திட்டமிட்டே தி.மு.க கூட்டணி மீது குற்றம்சாட்டி வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆகவே தமிழக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தினால் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது ஆட்கள் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொல்லப்பட்ட களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்தினருக்கு தி.மு.க. நிதியுதவி அறிவிப்பு!