Tamilnadu
திருச்சி ஸ்மார்ட் கழிவறையில் பாரதியார் உருவப்படம்? - பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்தியாவின் பல்வேறு கிராமங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஸ்மார்ட் டாய்லெட் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அவ்வப்போது பல்வேறு குளறுபடிகள் எழுந்து அவற்றில் பல சமூக வலைதளத்தில் நகைப்புக்கு உரியதாகியும் வருகின்றன.
இருப்பினும், சில ஸ்மார்ட் சிட்டி திட்டச் செயல்பாடுகள் மக்களை முகம் சுழிக்க வைப்பதும் நிகழ்கின்றன. அந்தவகையில், திருச்சியில் உள்ள கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கழிவறை நேற்று தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட் டாய்லெட்டில் சி.சி.டி.வி, சுத்தம் செய்வதற்கு தானியங்கி கருவி, ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை தெரியப்படுத்துவதற்கு சென்சார் என அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட் கழிவறையால் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதில், ஆண்கள் கழிவறை உள்ள பகுதியின் வாயிலில் மகாகவி பாரதியாரின் உருவ அடையாளம் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அதன் கீழ் பெயர் பொறிக்கப்பட்ட பலகை ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மக்களிடையே பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக ஆர்வலர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த பாரதியாரின் அடையாளம் மறைந்த எழுத்தாளர் ஞானி உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரப் போராட்ட உணர்வை தன்னுடைய எழுத்தால் ஏற்படுத்திய மகாகவி பாரதியாரை இழிவுபடுத்தும் வகையில் கழிவறை வாயிலில் அவரது அடையாளத்தைக் குறிப்பிடும் படத்தை வைத்திருப்பதற்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.
அதனையடுத்து, ஸ்மார்ட் டாய்லெட்டில் பாரதியார் உருவம் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகை நீக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இழிவான செயலைச் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Also Read
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!
-
“1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 சிறப்பு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்...” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!