Tamilnadu

சக பள்ளி மாணவனின் மலத்தை பட்டியலின மாணவனை அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை!

நாமக்கலில் பட்டியலினத்தைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவனை மலம் அள்ள வைத்ததற்காக அரசுப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

கடந்த 2015ம் ஆண்டு நவ.,13ம் தேதி பரமத்திவேலூர் ராமாபுரம்புதூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 3 மற்றும் 2 ஆகிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒன்றாக பாடம் எடுத்துள்ளார் ஆசிரியை விஜயலட்சுமி.

அப்போது, 3ம் வகுப்பு மாணவன் ஒருவன் தவறுதலாக வகுப்பறையிலேயே மலம் கழித்துள்ளான். அந்தச் சமயத்தில் சிறிதளவும் யோசிக்காமல் 2ம் வகுப்பில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவனை அழைத்து அந்த மலத்தை அள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.

அந்த குழந்தையும் அதனை செய்துள்ளது. பின்னர் சக மாணவர்கள் அந்தச் சிறுவனை கிண்டல் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த 2ம் வகுப்பு மாணவன் தன்னுடைய பெற்றோரிடம் இது தொடர்பாக தெரிவிக்கவும், பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

அதனையடுத்து, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டதும் பிற்படுத்தப்பட்டோருக்கான மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட விஜயலட்சுமி ஜாமினில் வெளிவந்துள்ளார்.

பின்னர் இறுதிக்கட்ட விசாரணை நிறைவுற்றதை அடுத்து இந்த வழக்குத் தொடர்பாக நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் விஜயலட்சுமி அடைக்கப்பட்டார்.