Tamilnadu

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு MBBS படிப்பில் 5% இடஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

பள்ளிப் படிப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல, தமிழகத்திலும் தமிழில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தர்மபுரி அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த என்.முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும், 5,400 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு, தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது, மாணவர்களை தமிழ் வழி படிப்பில் இருந்து ஆங்கில வழி கல்விக்கு மாற்றுவதுடன், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், தமிழ் வழி படித்த மாணவர்களின் நம்பிக்கையயும், நலனையும் பாதுகாக்க வேண்டும் எனவும், இதுதொடர்பாக, நவம்பர் 2, டிசம்பர் 11 ஆகிய தேதிகளில் தமிழக முதல்வர், தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர், தமிழக மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு அளித்த கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, பிப்ரவரி 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசு சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Also Read: #LIVE #TNAssembly | மத்திய அரசுக்கு பயந்த அடிமை அரசு அ.தி.மு.க - துரைமுருகன் சாடல்!