Tamilnadu

பெண்ணின் உயிரைப்பறித்த ”போண்டா” - பேசிக்கொண்டே சாப்பிட்டதால் நேர்ந்த கதி!

சென்னை, சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கங்காதரன்-பத்மாவதி தம்பதி. கங்காதரன் ராயப்பேட்டையில் உள்ள இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. ஆகவே, பத்மாவதியின் தாயார் சுகுணாவின் வீட்டிலேயே கங்காதரனும் , பத்மாவதியும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள டீக்கடையில் போண்டா வாங்கி சாப்பிட்டிருக்கிறார் பத்மாவதி. பேசிக்கொண்டே சாப்பிட்ட காரணத்தினால், அவர் தொண்டையில் போண்டா சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. சில நிமிடங்கள் மூச்சுத் திணறால் தவித்த பத்மாவதி மயங்கி விழுந்தார்.

இதனையடுத்து ஆம்புலன்ஸை வரவழைத்த தாயார் சுகுணா கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பத்மாவதியை அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, அவரை சோதனை செய்த மருத்துவர்கள், பத்மாவதி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.

பின்னர், பத்மாவதியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போண்டா சாப்பிட்ட போது, மூச்சுக்குழாயில் அடைத்துக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சூளைமேடு போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.