Tamilnadu
தமிழக அரசியலில் வெற்றிடமா? : "காலம் உருவாக்கிய தலைவர் மு.க.ஸ்டாலின்" - வைகோ பெருமிதம்!
புத்தாண்டையொட்டி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
“கோலம் போட்ட பெண்கள் மீது வழக்கு போடும் அலங்கோல ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது. மத்தியில் பெரும்பான்மை கிடைத்து விட்டதால் வேகமாக இந்துத்துவா கொள்கையை பா.ஜ.க அரசு செயல்படுத்தி வருகிறது. சமஸ்கிருதம், இந்தி மொழியை எல்லா இடங்களிலும் திணிப்பதற்கான வேலைகள் நடக்கின்றன.
ரெயில்வே தனியார்மயம் ஆக்கப்படாது என்று அந்தத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்து இருந்தார். ஆனால் 150 ரெயில்களுக்கு ஏல அறிவிப்பு விடப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு சொல்வதற்கும், செய்வதற்கும் எவ்வளவு வேறுபாடு?
தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலைமை மிக பரிதாபமாக உள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். ஆனால் மத்திய அரசுக்கு கை கட்டி சேவகம் செய்வதால் தமிழக அரசுக்கு நிர்வாக திறமையில் முதல் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் பணம் பெரும் அளவு கொடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. எத்தகைய முயற்சிகள் செய்திருந்தாலும் தி.மு.க கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறோம். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (சட்டசபை தேர்தல்) ஆட்சி மாற்றத்துக்கு, முன்னோட்டமாக இந்த ஆண்டு அமையும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் ஈழத் தமிழர்களை இலங்கையில் அவர்கள் வசித்த பகுதிகளுக்கே அனுப்பவேண்டும் என்பது என்னுடைய கொள்கை ஆகும். அதே வேளையில் அவர்கள் இங்கேயே வாழ வேண்டும் என்று விரும்பினால் குடியுரிமை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது வைகோவிடம், ‘கலைஞர்- ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழ்நாட்டு அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று கருதுகிறீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, ‘காலங்கள் தலைவர்களை உருவாக்குகிறது. அந்த இலக்கணங்களுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்’ என்றார்.
பேட்டியின்போது ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வக்கீல் அணி செயலாளர் தேவதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!