Tamilnadu

சென்னையில் 1.30 லட்சம் பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - 2019ன் போக்குவரத்து விதிமீறல் பட்டியல் வெளியீடு!

மதுபோதையில் வாகனம் இயக்கியவர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளைவிட இரு மடங்காக 2019ம் ஆண்டில் உயர்ந்திருக்கிறது என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டின் போக்குவரத்து விதி மீறல்கள் குறித்த புள்ளி விபரங்களை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டது. அதில் 2018ஆம் ஆண்டு பொறுத்தமட்டில் 7,749 விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில் 1,260 பேர் விபத்தில் பலியானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நடப்பு ஆண்டில் விபத்துக்களும் பலி எண்ணிக்கையும் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக போக்குவரத்து போலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் 6,832 விபத்துகள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 1,224 பேர் விபத்தில் பலியாகினர். சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்காக ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் பரிந்துரை செய்யப்பட்டதாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 159 பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 73 ஆயிரம் பேர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிய விவகாரத்தில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு இருமடங்காக உயர்ந்துள்ளது. 2017ல், 27 ஆயிரம் பேர் மீது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும், 2018ல் 40 ஆயிரத்து 166 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், 2019ல் 51 ஆயிரத்து 900 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரிடம் e-challan முறையில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் 2019ஆம் ஆண்டு மட்டும் 29 கோடியே 80 லட்சம் ரூபாய் சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.