Tamilnadu

“முழுமையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கும் வரை முடிவுகளை வெளியிடக்கூடாது” - அவசர வழக்கு தாக்கல்!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொது செயலாளர் செந்தில் ஆறுமுகம் தாக்கல் செய்துள்ள மனுவில், 1996 முதல் 2001 வரை நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல்கள் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேர்த்தே நடத்தப்பட்டன என்பதால், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்துவது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊராட்சி உறுப்பினர் மற்றும் தலைவர் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு அனுமதியில்லை என்றபோதிலும், ஒன்றியக்குழு மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால், வாக்குப்பதிவில் தாக்குதல் ஏற்படுத்தும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக்கூடாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்ததாகவும், அதற்கு பதிலளித்த ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என விளக்கமளித்துள்ளதால், ஒன்றாக சேர்த்து முடிவுகளை வெளியிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தலில் பல கட்டங்களாக வாக்குகள் எண்ணப்பட்டாலும், எண்ணிக்கை ஒரே நாளில் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படுவதையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு டிசம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Also Read: #LIVE ஊரக உள்ளாட்சி தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் - பல இடங்களில் அ.தி.மு.க-வினர் முறைகேடு!