Tamilnadu

கோவையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை!

கோவை பன்னிமடையை அடுத்த கஸ்தூரிநாயக்கன்புதூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25ம் தேதி காணாமல் போனார். பின்னர் அடுத்தநாளே வீட்டின் பின்புறத்தில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர் இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலிஸார் கைது செய்தனர். இதையடுத்து சந்தோஷ் குமார் மீது போக்சோ சட்டம், பாலியல் வல்லுறவு, கொலை செய்து தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறுமி உடல் மீட்கப்பட்ட போது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு கோவை மகிளா மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Also Read: ஒரு குற்றவாளிக்கு என்கவுன்டர் மற்றொருவருக்கு தூக்கு - கோவை சிறுமி பாலியல் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்த வழக்கில் போலிஸார் இறுதி அறிக்கை தாக்கல் செய்த பின்னர் நீதிபதி ராதிகா இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.

முன்னதாக காலையில் நீதிமன்றம் கூடியதுமே, சந்தோஷ் குமார் குற்றவாளி என்றும், பிற்பகல் 3 மணிக்கு வழக்கின் இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, பிற்பகலில் சந்தோஷ் குமாருக்கான தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.

அந்தத் தீர்ப்பில், போக்சோ வழக்கின் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 302 சட்டப்பிரிவின் கீழ் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார் நீதிபதி. மேலும், குற்றவாளி தடயங்களை மறைத்த குற்றத்திற்காக மேலும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.