Tamilnadu

பணமதிப்பிழப்பு தெரியாமல் 31,000 ரூபாய் சேமித்து வைத்த கோவை மூதாட்டி : வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர்!

பிரதமர் மோடி, முந்தைய ஆட்சியின்போது 500,1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த நாள் முதல் இந்திய மக்கள் படாதபாடுபட்டு வருகின்றனர். பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து சிறு, குறு வணிகர்கள் இதுகாறும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் 500,1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டதை அறியாமல் திருப்பூரைச் சேர்ந்த தங்கம்மாள், ரங்கம்மாள் ஆகிய மூதாட்டிகள் 60 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சேமித்து வைத்திருந்துள்ளனர். பணமதிப்பிழப்பு குறித்து அறிந்ததும், சேமித்து வைத்த பணம் மொத்தமும் வீணானதால் வேதனைக்குள்ளாகினர். அதில், ரங்கம்மாள் என்பவர் தற்போது உயிரோடில்லை.

இந்நிலையில், ரங்கம்மாள், தங்கம்மாளை போன்று கோவை கொண்டயம்பாளையத்தைச் சேர்ந்த கமலம்மாள் (92) என்ற மூதாட்டி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளாக 31 ஆயிரம் ரூபாய் சேமித்து வைத்துள்ளார்.

25 ஆயிரத்துக்கு 500 ரூபாய் மற்றும் ஆறாயிரத்துக்கு 1000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்துள்ளார் அவர். வயது மூப்பு காரணமாக காது கேட்கும் சக்தியும், மறதியும் இருப்பதால் கமலம்மாள் தான் சேர்த்து வைத்த பணம் இருப்பதையே மறந்துவிட்டாராம்.

தற்போது கமலம்மாளின் பீரோவை சுத்தப்படுத்தியபோது, அதில் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்ததை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். செல்லாத ரூபாய் நோட்டுகளை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அதனை மாற்ற முடியாமல் போனதை எண்ணி கவலை அடைந்துள்ளனர்.

Also Read: “பணமதிப்பிழப்பு செய்யப்பட்டது தெரியாது” : பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்த மூதாட்டிகள்!