Tamilnadu

பணமதிப்பிழப்பின்போது 1500 கோடிக்கு சொத்துகளை வாங்கிக் குவித்த ஜெயலலிதா தோழி : முறைகேடுகள் அம்பலம் !

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின்படி, பினாமிகள் பெயரில் பல கோடி ரூபாய் மதிப்பில் சசிகலா சொத்துகள் வாங்கி குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அந்த சொத்துகளை முடக்கிய வருமானவரித் துறையினர், கடந்த 2012-13 முதல் 2016-17 வரையிலான சசிகலாவின் வருமான வரிக் கணக்குகளை மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்து பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது செய்த முறைகேடுகள் தற்போது வெளியாகி உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி சென்னை பெரம்பூர் மற்றும் மதுரை கே.கே.நகரில் உள்ள ஷாப்பிங் மால்கள், புதுச்சேரியில் சொகுசு விடுதி, கோவையில் பேப்பர் மில், சென்னையை அடுத்த ஒரகடத்தில் சர்க்கரை ஆலை, சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் சாஃப்ட்வேர் நிறுவனம், 50 காற்றாலைகள் என ரூ.1,500 கோடி மதிப்பில் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராகவும், பினாமிகள் பெயரில் சொத்துகள் வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

Also Read: பணமதிப்பிழப்பின் போது ரூ.1500 கோடிக்கு சொத்துக்களை வாங்கி குவித்த சசிகலா- எங்கே? எப்படி? பரபரப்புத் தகவல்

இந்நிலையில், வருமான வரித்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, நாமக்கல் திருச்செங்கோட்டைச் சேர்ந்த குமாரசாமியின், கிறிஸ்டி என்ற நிறுவனத்திற்கு 237 கோடி ரூபாய்க்கு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக சசிகலா கடனாக வழங்கியது தெரியவந்துள்ளது.

6 சதவிகித வட்டியுடன் இந்த தொகை ஓராண்டுக்குள் திருப்பித் தரவேண்டும் என்ற ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதாகவும், இந்த ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்தவருக்கு 7 கோடியே 50 லட்சம் ரூபாய் கமிஷனாக தரப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. இதனை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளது.

இந்த கிறிஸ்டி நிறுவனம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஜூலை மாதம் சத்துணவுக்கு தேவையான முட்டை உள்ளிட்டவற்றை விநியோகம் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிறிஸ்டி நிறுவனத்துக்குச் சொந்தமான 75 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.