Tamilnadu

“இன்னொரு மெகா ஊழலுக்குத் திட்டமிடும் அ.தி.மு.க அரசு” - தங்கம் தென்னரசு ‘பகீர்’ குற்றச்சாட்டு!

அ.தி.மு.க அரசு மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் 3,000 கோடி ரூபாய் ஊழல்; காவல்துறைக்கு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்; சுகாதாரத் துறை, உள்ளாட்சி துறை ஆகியவற்றில் ஊழல் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மெகா ஊழல் நடைபெற உள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் முழுவதும் ஆப்டிகல் பைபர் கேபிள் புதைக்கும் திட்டம் 2,000 கோடி மதிப்பில் தயாராகி உள்ளது. இந்தப் பணிக்கான டெண்டர் விடும் பணிகள் கடந்த டிசம்பர் 11ம் தேதி தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ளது.

இந்த டெண்டரில் பங்கேற்கும் 2 நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தம் தருகின்றன. அரசின் உயர்பொறுப்பில் உள்ள ஒருவரை சந்தித்து, ஒப்பந்த விதிகளை தங்களுக்கு சாதகமாக மாற்றி தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

விதிகளில் புதிதாக 6 நிபந்தனைகள் சேர்க்கவேண்டும் என்றும் இல்லையெனில் டெண்டரை ரத்து செய்து விட்டு புதிதாக டெண்டர் விடும்படியும் அழுத்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. திட்ட மதிப்பீடான 2,000 கோடியில் 14% பேரம் பேசப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது தவறு. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கபளீகரம் செய்கிறது. அதற்கு மாநில அரசு துணை போகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு கைப்பற்றினால் தமிழக மாணவர்களுக்கான 69% இட ஒதுக்கீடு உரிமை பறிபோகும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: “சென்னை மாநகராட்சி பணிகளில் 1,000 கோடி ஊழல்; உடனடி விசாரணை தேவை” - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!