Tamilnadu

மேட்டுப்பாளையம் ‘தீண்டாமை சுவர்’ இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கு : உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை சுவர் விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் நில உரிமையாளரை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 2ம் தேதி மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தலித் சமுதாயத்தை சேர்ந்த 17 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தையடுத்து சுற்றுச்சுவர் எழுப்பிய நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் 20 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொது செயலாளர் சாமுவேல் ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநிலம் முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை கண்டறிந்து அகற்றவேண்டும் எனவும் பலியான குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளுக்கு கீழ் வழக்குப் பதிவு செய்யவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தீண்டாமை சுவர் என கூறப்படும் அந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா எனவும், சுற்றுச்சுவர் கட்டப்பட்டபோது குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் சுவர் எழுப்பகூடாது என விதிகள் ஏதும் இருந்ததா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இந்த வழக்கில் நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.