Tamilnadu

ரெக்கார்ட் நோட் எழுதி வராததை ஆசிரியை கண்டித்ததால் மாணவன் தற்கொலை - ஒரகடம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே ரெக்கார்ட் நோட் எழுதி வராத அரசுப் பள்ளி மாணவனை ஆசிரியர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (45). இவரது இரண்டாவது மகன் மணிமாறன் (15) வடக்குப்பட்டு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று பள்ளி சென்ற மாணவன் மணிமாறனுக்கு அறிவியல் பாடம் எடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் பாடத்தை ஆசிரியை சுமதி எடுத்துள்ளார். அப்போது மாணவன் மணிமாறன் ரெக்கார்ட் நோட் எடுத்து வரவில்லை. இதனால் ஆசிரியை சுமதி மணிமாறனை கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரெக்கார்ட் நோட்டை எடுத்து வருகிறேன் எனக்கூறி வீட்டிற்குச் சென்ற மாணவன் மணிமாறன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவனின் உடலை அடக்கம் செய்ய அவரது பெற்றோர், உறவினர்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதனிடையே மாணவன் இறந்தது குறித்து காவல்துறைக்கு தகவல் வந்ததையடுத்து காவல்துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் உயிரிழந்ததை அறிந்த அவரது பெற்றோர் பள்ளிக்குச் சென்று ஆசிரியரை தாக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பெற்றோரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியை கண்டித்ததால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: “மத்திய மாநில அரசுகளே என் சாவுக்கு காரணம்” - கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்!