Tamilnadu

கடலூரை அடுத்து தருமபுரியிலும் ஏலம் போன பஞ்சாயத்து தலைவர் பதவி: திடுக்கிடும் தகவல்!

உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் கடந்த 3 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்த அ.தி.மு.க அரசு, தி.மு.கவின் பல்வேறுகட்ட போராட்டத்தினாலும், நீதிமன்றங்களின் உத்தரவாலும் கட்டாயத்தின் பேரில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளது.

ஆனால், பல்வேறு குளறுபடிகளுடன் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று ( 10ந் தேதி) கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்காக அ.தி.மு.க, தே.மு.தி.க., கட்சிக்காரர்கள் முறையே ரூபாய் 50 லட்சம், ரூபாய்15 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பதிலாக ஏலத்தில் பதவிகளை அ.தி.மு.கவினர் பெற முயல்வது ஜனநாயக விரோதச் செயல் என கண்டனம் எழுந்துள்ளது.

Also Read: ஏலம் விடப்பட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி - கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பனைக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை அதேப்பகுதியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் இம்மானுவேல் ரூ.24 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக திருமல்வாடி, கூக்குட்டமருதஅள்ளி, மணல் பள்ளம், பனைக்குளம், வத்திமரதஅள்ளி ஆகிய 5 கிராம மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், பனைகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி எப்போதும் ஏலத்திலேயே எடுக்கப்படுவதாகவும் 2011ம் ஆண்டு ரூ.20 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த 2016ம் ஆண்டு 35 லட்சத்துக்கு ஏலம் போன ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, தேர்தல் ரத்தான காரணத்தினால் பணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

இதுபோன்ற முறைகேடான ஏல முறையை கைகட்டி வேடிக்கைப்பார்க்கும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.