Tamilnadu

தொடர்ந்து அவதூறு பரப்பி வந்த உறவினரை வெட்டிக் கொன்ற கணவன் மனைவி - தேனி மாவட்டத்தில் அதிர்ச்சி!

தேனி மாவட்டம் ஒத்தப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரன், அவரது மனைவி நிரஞ்சனா. மணிகண்டன் பாண்டீஸ்வரனின் மனைவி நிரஞ்சனாவிடம் செல்ஃபோனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாண்டீஸ்வரன் தனது குடும்பத்துடன் ஒத்தப்பட்டியில் இருந்து ராயப்பன்பட்டிக்கு குடியேறினார். இருப்பினும் நிரஞ்சனா தன்னுடன் தனிமையில் பேசி வருவதாக, மணிகண்டன் அவதூறு பரப்பி வந்துள்ளார். இதனால், பாண்டீஸ்வரனுக்கும், நிரஞ்சனாவிற்கும் அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் மணிகண்டன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு இல்லாததால் அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குத் தேடிச் சென்றுள்ளனர். சண்முகா நதி சாலையில் மணிகண்டனும், அவரது மனைவி ராஜேஸ்வரியும் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அவர்களை வழிமறித்த பாண்டீஸ்வரனும், நிரஞ்சனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பாண்டீஸ்வரன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனிகண்டனை தாக்கியுள்ளார். இதைத்தடுக்க வந்த ராஜேஸ்வரிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ராஜேஸ்வரி, தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், நிரஞ்சனா மற்றும் பாண்டீஸ்வரன் இருவரும் ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவதூறு பரப்பி வந்த உறவினரை, கணவன் - மனைவி சேர்ந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.