Tamilnadu

“சிலைக் கடத்தல் ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” - பொன்.மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன்.மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல், பொன்.மாணிக்கவேலின் பதவிக் காலம் கடந்த நவம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தன்னுடைய பதவிக் காலத்தை நீட்டிக்க உத்தரவிடக் கோரி பொன்.மாணிக்கவேல் மற்றும் டிராபிக் ராமசாமி ஏற்கனவே தொடர்ந்த வழக்குகளும் இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜியாக மீண்டும் பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமிக்கக் கோரி தான் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துகொள்ள வேண்டும் என யானை ராஜேந்திரன் முறையிட்டார்.

அப்போது, தமிழக அரசு தரப்பில், சிலை கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இந்த வழக்குகளில் உயர்நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிலை கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்து, பொன்.மாணிக்கவேல் தனது தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Also Read: “உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசே காப்பாற்ற நினைக்கிறதா?” - சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!