Tamilnadu

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை திணிக்கும் அ.தி.மு.க அரசு!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மேன்மையை அறிவதற்கும், அதன் சிறப்புகளை பிறமொழியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிறநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் பொருட்டு, சிறப்பான ஆசிரியர்களை கொண்டு மொழிப்பெயர்ச்சி வழங்குவதற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ரூ.6 லட்சம் நிதி ஒதுகீடு செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த டிச.2ம் தேதி நடந்த விழாவில், பிரெஞ்சு, இந்தி, வங்கம் மற்றும் மராத்தி ஆகிய மொழிகளுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்தார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன்.

இந்த பயிற்சி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் M.phil மற்றும் Ph.D மாணவர்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சென்னையில் உள்ள இந்தி பிரசார சபா மூலம் ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்றுவிப்பதற்கு முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கடுமையான கண்டனங்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சியை மாணவர்களே விரும்பிதான் கற்றுக்கொள்கிறார்கள் என தமிழ் வளர்ச்சித்துறை அவர்களை மிரட்டி பொதுவெளியில் கூறவைத்துள்ளதாகவும் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டி இருந்தார்.

Also Read: “தமிழ் ‘அழிப்புத் துறை’யாகவே மாறிவிட்டதா தமிழ் வளர்ச்சித்துறை?” - அமைச்சருக்கு தங்கம் தென்னரசு கண்டனம்!

மேலும், இது போன்று மாணவர்களை மிரட்டி அச்சுறுத்தும் செயல் வெட்கக் கேடான செயல் என்று கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்த தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., மொழி உணர்வினை அடக்குமுறையாலும், அச்சுறுத்தலாலும் அடக்கிவிடலாம் எனக் கருதுவது பேதமை என்பதை உரியவர்கள் உணர்ந்து நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன் எனவும் கூறியுள்ளார்.