Tamilnadu

சாலை வசதி இல்லாதததால், கர்ப்பிணிப் பெண்ணை தொட்டில் கட்டித் தூக்கிச் சென்ற சம்பவம் : ஈரோட்டில் அவலம்

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை பகுதியில் சுண்டைப்போடு என்ற கிராமம் அமைந்துள்ளது. மலைப்பகுதியில் உள்ள இந்தக் கிராமத்திற்கு இதுவரை அரசு போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தரவில்லை. மோசமான நிலையில் இருக்கும் மண் சாலையில் ஒரே ஒரு அரசு பேருந்து, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் அந்த கிராமத்திற்கு இயக்கப்படுகிறது.

காலையில் வேலைக்குச் செல்பவர்கள் மாலையில் வேலை முடிந்தாலும், ஈரோடு பேருந்து நிலையத்திலேயே தங்கி இரவு பேருந்து வரும் போதுதான் வீடு திரும்பும் நிலை உள்ளது.

இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப்பெண் குமாரிக்கு நேற்று திடீரென பிரசவலி ஏற்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைத்தும், யாரும் உரிய பதில் அளிக்காத நிலையில், கர்ப்பிணிப் பெண்ணை மூங்கில் தொட்டியில் கட்டித் தூக்கிச் செல்ல கிராம மக்கள் முடிவு எடுத்தனர்.

அதன்படி, மூங்கிலில் சேலையை தொட்டில் போல கட்டி கர்ப்பிணியை தூக்கிச் சென்றனர். அந்த கிராமத்திலிருந்து 25 கி.மீ., தொலைவில் இருக்கும், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால், சாலை சேறும் சகதியுமாக இருந்துள்ளது. அப்போது, அந்த வழியாக வாகனத்தில் வந்த வேறு ஒரு கிராம மக்கள், கர்ப்பிணி பெண்ணைத் தொட்டில் கட்டி தூக்கிவந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர்.

பின்னர் அவர்களின் வாகனத்திலேயே கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குமாரிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தை மற்றும் குமாரியை அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தாயும், சேயும் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர கால நேரங்களில், சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் போது அதுவே இறுதி பயணமாகிவிடுவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு அந்த கிராமத்திற்குச் சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.