Tamilnadu

“ஹெல்மெட் அணியாததால் மட்டுமே வாகன ஓட்டிகள் உயிரிழப்பதில்லை; தரமற்ற சாலைகளாலும்தான்” : ஐகோர்ட் சாடல்!

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தக் கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜி சாம்சன் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “2019 ஜனவரி முதல் அக்டோபர் வரை சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 47 லட்சத்து 87 ஆயிரத்து 812 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்துக்குள்ளாகி 3,535 பேர் பலியாகியனர். ஹெல்மெட் அணிந்தும் விபத்தில் சிக்கியவர்களில் 347 பேர் பலியாகினர்” என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆட்டோக்களில் பக்கவாட்டு கண்ணாடி வைக்காதவர்கள் மீது 3,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”

இதை பதிவு செய்த நீதிபதிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பலியாவதற்கு ஹெல்மெட் அணியாதது மட்டுமே காரணமல்ல என்றும், சாலையின் தரமும், சாலையை முறையாக பராமரிக்காததும் காரணம் எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை இன்னும் முழுமையாக அமல்படுத்துவது குறித்தும், சாலைகளை மேம்படுத்துவது குறித்தும், குறிப்பாக சென்னையில் உள்ள முக்கியமான சாலைகளை முறையாகப் பராமரிப்பது குறித்தும் கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “தலைக்கவசம் வாகன ஓட்டிகளுக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா?” - உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி!