Tamilnadu

8 கோடி பணம், 1 கிலோ தங்கம் - கொலையில் முடிந்த போதை ஆசாமியின் உளறல்!

சென்னை தாம்பரம் அடுத்துள்ள மூகாம்பிக்கை நகரைச் சேர்ந்தவர் முருகன். மது பழக்கம் உள்ள முருகன் கடந்த 21-ம் தேதி தனது நண்பருடன் முடிச்சூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மதுகுடித்துள்ளார்.

அப்போது, தனது நண்பரிடம் கடந்தவாரம் தனக்கு ஒரு இருசக்கர வாகனம் கிடைத்ததாகவும், அதில் 8 கோடி பணம் மற்றும் 1.5 கிலோ தங்கம் இருந்தாகவும் மதுபோதையில் உளறியுள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் இருந்த முனியாண்டி என்பவர் முருகன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மதுகுடித்துவிட்டு கிளம்பும் போது, 2000 ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு மீத தொகையை டிப்ஸாக வைத்துக் கொடுத்ததாகவும் தெரியவருகிறது.

முருகனின் இந்த செயலைப் பார்த்த முனியாண்டி முருகனைப் பின் தொடர்ந்து அவரை வீட்டைக் கண்டுபிடித்தார். பின்னர் மறுநாள் முனியாண்டி தனது நண்பரான அருண் பாண்டியன், விக்னேஷை அழைத்துச் சென்று முருகன் வீட்டில் போலிஸ் என கூறி நகை பணத்தைக் கேட்டுள்ளனர்.

முருகன்

தான் பணத்தை தாம்பரம் குப்பை மேட்டில் புதைத்துவைத்துள்ளதாக கூறி அங்கு போய் முருகன் தேடியுள்ளார். அப்போது அங்கு பாம்பு ஒன்று முருகனைக் கடித்துள்ளது, அதன் பிறகு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் முருகன் சிகிச்சைப் பெற்றார்.

அதன்பிறகு வீடு திரும்பிய முருகனிடம் 10 பேர் கொண்ட கும்பல் பணம் - நகைகளைக் கேட்டு அடித்துள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த முருகன் உயிரிழந்தார். இதனையடுத்து முருகனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய 10 பேரை போலிஸார் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் 8 கோடி ரூபாய் பணம், 1.5 கிலோ தங்கம் முருகனுக்கு கிடைத்தது உண்மையா? அல்லது போதையில் முருகன் உளறினாரா? என்று முருகன் குடும்பத்தினரிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.