Tamilnadu

கனமழையால் நடந்த சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாப பலி:  அதிர்ச்சித் தகவல்!

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் சில வருடங்களுக்கு முன்பு ரயில் பாதையில் உள்ள தனது சொந்த நிலத்தில் செம்மண் கொண்டு வீடுகட்டி வசித்துவந்துள்ளார். வழக்கம் போல இவர் தனது குடும்பத்தினர் ஐந்து பேருடன் இரவு உணவை முடித்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார்

ரயில்பாதையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் இவர் வீட்டைச் சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் நேற்றுபெய்த கனமழை மற்றும் ரயில் சென்ற அதிர்வுகளால் தீடீரென வீடு முழுவதும் இடிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.

இதில் இடிபாடுகளில் சிக்கி நாராயணனின் மனைவி மாலா, மகள் மகேஷ் மற்றும் ஒன்றரை வயது குழந்தை தனுஷீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், சம்பவம் அறிந்து அருகில் இருந்து வந்த அக்கம்பக்கத்தினர் மற்றவர்களை மீட்டனர்.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மழையில் வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.