Tamilnadu

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கினாலும், சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதன்பிறகு, தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தை பொறுத்தவரை வரும் 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாகவும் கிழக்கு திசை காற்றின் சாதகப் போக்கின் காரணமாகவும் கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.

கடலோர மாவட்டங்கள், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6 செ.மீ மழையும், பாண்டிச்சேரியில் 4 செ.மீ மழையும், காஞ்சிபுரம் கேளம்பாக்கத்தில் 3 செ.மீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.