Tamilnadu

உறவினர்கள் வீட்டை நோட்டமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்ட காதல் ஜோடி... காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா!

சென்னை, காரம்பாக்கம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பாண்டியன். அவரது மனைவி ரேவதி. இவர்களது வீட்டில் கடந்த 21ம் தேதி 4 பவுன் தங்க நகை திருடுபோயுள்ளது.

இதுகுறித்து ஜெகதீஷ் பாண்டியன் வளசரவாக்கம் போலிஸில் புகார் அளித்தார். வளசரவாக்கம் போலிஸார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் வந்து சென்றது பதிவாகி இருந்தது.

அதை வைத்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ரேவதியின் உறவினரான கோயம்பேட்டைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது காதலியான மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த நித்யா என்பதும், அவர்களிருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேவதி வீட்டிற்கு வந்து சென்றதும் தெரியவந்துள்ளது.

அப்போது ரேவதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே செல்லும்போது சாவியை சுவர் ஓரமாக வைத்துவிட்டுச் செல்வதை நோட்டமிட்டு பின்னர் அங்கு வந்த இருவரும் சாவியை வைத்து வீட்டைத் திறந்து நகைகளை கொள்ளையடித்து பின்னர் சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்கள், இருவரிடமும் நடத்திய விசாரணையில், காதலர்களான இருவரும் என்ஜினீயரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்து வந்ததும் தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இருவருக்கும் போதிய வருமானம் இல்லாததால் உறவினர் வீட்டிற்கு ஜோடியாக சென்று அவர்களது வீட்டை நோட்டமிட்டு தொடர் கொள்ளையில் ஈடுபட்டு அந்த பணத்தைக் கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து 4 பவுன் நகைகளை போலிஸார் பறிமுதல் செய்யதுள்ளனர்.

Also Read: உணவு எடுத்து வரும் டெலிவரி பாய்களிடம் திட்டமிட்டு கொள்ளை : 1 வருடமாக கைவரிசை காட்டிய ‘பலே’ கொள்ளையன்!