Tamilnadu

‘உயிர்க்கொல்லி பால்’ பயன்பாட்டில் தமிழகம் முதலிடம் : - அஃப்ளாடாக்ஸின் M1 என்றால் என்ன தெரியுமா?

மக்களவையில், பாலில் செய்யப்படும் கலப்படம் குறித்து தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே எழுத்துப்பூர்வமாக பதிலளித்திருந்தார்.

அதில், '' நாடு முழுவதும் விற்கப்படும் பெரும்பாலான பால், குடிப்பதற்குப் பாதுகாப்பானது. ஆனால் 7% பால் குடிப்பதற்கு உகந்ததல்ல. தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அஃளாடாக்ஸின் எம்.1 (Aflatoxin M1) என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது.

நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்த இடங்களில் டெல்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன.

தமிழகத்தில் 551 பால் மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது, உணவுக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஃப்ளாடாக்ஸின் எப்படி உருவாகிறது?

மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்கள் திறந்தவெளியில் சேமிக்கப்படுவதால், ஈரப்பதத்தின் மூலம் அவற்றில் 'அஃப்ளாடாக்ஸின் எம்1' பூஞ்சை உருவாகிறது. அவற்றை உண்ணும் மாடுகளின் உடலில் சென்று பின்னர் பாலிலும் அது கலந்துவிடுகிறது. தீவனம் மட்டுமின்றி மாடு உண்ணும் வைக்கோல் உள்ளிட்ட பொருட்களில் உள்ள ஈரப்பதத்தால் கூட அஃப்ளாடாக்ஸின் உருவாகும் எனக் கூறப்படுகிறது.

நச்சுப் பாலை குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!

இந்த நச்சுப் பாலை குடிப்போருக்கு கல்லீரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், வளர்ச்சிக் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Aflatoxin m1 in milk - Infographics

இதைத் தவிர்க்க, பாலின் தரம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படவேண்டும். கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிட்யூட் தவிர, பால் அல்லது வேறு எந்த நுகர்வுப் பொருட்களின் தரத்தையும் சரிபார்ப்பதற்கான நிலையம் இல்லை. மக்களின் அன்றாடத் தேவையான பால் விஷயத்தில் அரசு போதிய கவனம் செலுத்தவேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.